Wednesday, June 9, 2010

தலைமைப் பண்புக்கான தகுதிகள்

  இன்றைய இளைஞர்கள் பலர் மிக்க திறமைசாலிகள். குறுகிய காலத்தில் உயர் பதவிகளை தொடுகின்றனர். கை நிறையச் சம்பளம், கார் என பல்வேறு வசதிகளை சிறு வயதிலேயே அடைந்து விடுகின்றனர். ஆனால் தலைமையேற்கும் பண்பு தற்போதைய இளைஞர்களிடம் குறைவாக உள்ளது. தலைமை ஏற்பது என்றால் ஏதோ அரசியல் கட்சிக்கு தலைமையேற்பது என்று அர்த்தமல்ல.

ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு அமைப்பையோ தலைமையேற்று நடத்துவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது என்பது ஒரு இரவில் நடந்துவிடக் கூடிய விஷயம் அல்ல. இது ஒரு தொடர் நடவடிக்கை. கற்றுக் கொள்ள வேண்டியது கடல் அளவு உள்ளது என்கிறார் தனியார் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒருவர்.

இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தலைமைப் பண்புகள்:

நல்ல பேச்சாற்றல்: தகவல்களை தெளிவாகவும் சரியாகவும் பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவரே தலைவராக முடியும். சுருக்கமாகச் சொல்லப் போனால் நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும்.

நேர்மை: தலைமை ஏற்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மதிக்கும் வகையில் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும். மேலும் நம்பகத்தன்மை கொண்டவாரக இருக்க வேண்டும்.

மற்றவர்களை சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கு முன், உங்களை நீங்களே வழிநடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே ஒழுக்கத்துடன் வழி நடத்துவதுதான் மிகவும் கடினமான செயல்.

தொலைநோக்குப் பார்வை: தொலைநோக்கு பார்வை கொண்டவரே சிறந்த தலைவராக விளங்க முடியும்.

செயல் திறன்: ஒரு குழுவுக்கோ அல்லது அமைப்புக்கோ தலைமையேற்பவர் வாய்ச் சொல் வீரராக மட்டும் இருந்தால் போதாது. சிறந்த செயல் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

நல்லவர்களை அடையாளம் காணும் பண்பு: தனக்கு கீழ் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்யும்போது நல்லவர்களையும் நம்பிக்கையானவர்களையும் கண்டறியும் திறமை வேண்டும்.

இலக்கை அடைய ஊக்குவித்தல்: நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைய நமக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும்.

விமர்சனங்களை ஏற்கும் பக்குவம்: நமது செயல்கள் குறித்த விமர்சனங்களை ஏற்று ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் வேண்டும். மற்றவர்கள் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.

நிலைத்ததன்மை: வழக்கமான செயல்களில் நிலைத்ததன்மை இருக்க வேண்டும். முடிவு எடுப்பதற்கு முன் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.

No comments: